Thursday, June 30, 2011

மறுவீடு


திருமணமாகி கணவனின் வீட்டுக்கு போகும் பெண்ணுக்கு எவ்வளவு பயம் இருக்குமோ அதேபோல் முதல் தடவை மனைவியின் பிறந்த வீட்டுக்கு போகும் கணவனுக்கு கூச்சம் கலந்த வெட்கம் இருப்பதும் உண்மை. காரணம் மருமகனை கேலி செய்ய இறக்குமதியான உறவினர்களும், மருமகனின் நடவடிக்கை மூலம் அவனின் குணாதிசயங்களை  கண்டுப்பிடிக்க முயலும் உளவுத்துறை அதிகாரியான மாமனாரும்,வெட்கத்தின் உரிமையாளரான மாமியாரின் சேட்டைகளாளும், ஊமையோ என்று தோன்றும் அளவுக்கு அமைதிக் காக்கும் மச்சினனின் அமைதியாளும், எப்படி பந்துப் போட்டாலும் சலிக்காமல் அடிக்கும் மச்சினிச்சியும் தான் காரணங்களுக்கு முக்கியமானவர்கள்.

மாமனாரின் வீட்டுக்குள் முதல் தடவை நுழையும் முன் ஆர்த்தி வைப்போகம் கண்டிப்பாக உண்டு. இதுக்கு இன்னொரு பெயர் எண்ட்ரன்ஸ் ஃபீஸ்னு(entrance fee) சொல்லலாம். நம்ம யாருக்காவது தானம் பண்ணினால் வீட்டுக்கு உள்ளே இருந்து தான் தானம் பண்ணுவோம்.. ஆனால் இந்த ஆர்த்தி வைப்போகத்திற்கு வீட்டுக்கு வெளியே இருந்து தானம் பண்ணவேண்டும்.100ரூபாயிலிருந்து 1000ரூபாய் வரைக்கும் செய்யலாம்.பணம் போகுதேனு அழக்கூடாது…. இப்படி பண்ணுவதுனால் நமக்கு 100மடங்குக்கு மேல் வரும் என்று சந்தோஷப்பட வேண்டும்.வீட்டினுள் நுழைந்தவுடன் கண்டிப்பாக ஒரு டம்ளரில் பால் தரப்படும். இதுக்கு காரணம் மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு நடக்கும் விளையாட்டுப் போட்டிகளுக்கு இணையாக மாமனாரின் வீட்டுக்குள் இண்டோர் கேம் உண்டு.இங்கு நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டியது இந்த விளையாட்டு உளவுத்துறை அதிகாரியால் உண்ணிப்பாக கவனிக்கப்படும். எவ்வாரெனில் நாம் விளையாடும் ஒவ்வொறு விளையாட்டுகளிலும் நாம் உளவுத்துறை அதிகாரியின் மகளுக்கு விட்டுக்கொடுக்க வேண்டும்.இதன் மூலம் அதிகாரி குறிப்பெடுத்துக்கொள்வது மருமகன் விட்டுக்கொடுத்து வாழ்பவர் என்று.

அடுத்து பலகாரம் தரப்படும்.இதை மாடு பயிரை மேய்வது போல் மேயக்கூடாது.நுனிப்புல் மேய்வது போல் சாப்பிடவேண்டும்.அப்பொழுது இறக்குமதியான உறவினர்களில் ஒரு கிழவி நல்லா சாப்பிடுங்கனு சொல்லும். இதற்கு அப்பரம் ரெண்டு பலகாரம் சாப்பிடுவது நல்லது. ஏண்டா சொன்னோம் என்று அந்த கிழவி நினைக்கும் அளவுக்கு சாப்பிடுவது உகந்தது அல்ல.

இப்பொழுது மச்சினனின் மூலம் உளவுத்துறை அதிகாரியின் மேற்ப்பார்வையில் மருமகனுக்கு டிவி ரிமோட் கொடுக்கப்படும்.இதுவும் மருமகனை சோதிக்க ஒரு அஸ்திரம். மருமகன் என்ன சேனல் (channel) பார்கிறார் என்று பார்க்கப்படும். நமக்கு பிடித்த நமிதாவே வந்தாளும் நாம் கண்ணும் கருந்துமாக அந்த சேனலை மாத்திவிடவேண்டும்.சிரிப்பொலியோ,ஆதித்யாவோ பார்க்கவேண்டும். இல்லனா நம்ம பொழப்பு சிரிப்பா சிரிக்கும். மிக முக்கியமானது  டிஸ்கவரி சேனல், நேஷனல் ஜியாகரஃபி சேனல் பார்க்கக்கூடாது. மீறி பார்த்தால் காட்டுப் பயல் என்று குறிப்பு எழுதிடுவாரு அதிகாரி. டிவி பார்த்துக்கொண்டு இருக்கும் போதே மதிய உணவுக்கு தயாராகிக்கொண்டிருக்கும் உணவின் வாசனை காற்றில் தென்றலாய் வந்து நமக்கு புயலாய் பசியைத் தூண்டும்.சமையல் அறைப்பக்கம் பார்க்கும் போது தான் நமக்கே தெரியும் நம்மை சமையலறையிலிருந்தும் இன்ன பிற அறைகளிலிருந்தும் உறவினர்கள் நம்மை ஏதோ மாற்று கிரகவாசிகள் போலவும் வனத்தில் இருந்து வந்த விலங்குகள் போலவும் பார்ப்பது தெரியும்.ஆனால் நம் உள்மனசு சொல்லும் நம்ம அழகுல அப்படியே ஷாக்காயிட்டாங்கனு.


சாப்பாடு,(எழுதும்போதே விரலில் எச்சி ஊருது) இது போல ஒரு சாப்பாட்டை இதுக்கு முன்னும் சரி பின்னும் சரி மருமகன் பார்த்திருக்கவும் மாட்டார், சாப்பிட்டிருக்கவும் மாட்டார் என்பது உண்மையோ உண்மை.மாமனார் சமையல் அறையை நோக்கி “என்ன மணியாச்சு” என்று ஒரு குரல் கொடுப்பார் இது தான் மருமகனுக்கு மனைவியின் வீட்டில் இருந்து வரும் முதல் ஆதரவுக்குரல்.கேள்வி சென்றடைந்தவுடன் எட்டுக்கு எட்டு சமையல் அறையிலிருந்து சினிமா பார்த்திட்டு வருபவர்களைப்போல இறக்குமதியான உறவினர்கள் கும்பலாக வருவாங்க. பறிமாரிய உணவுகளை பார்த்தால் நான்கு இனம் கூண்டோடு அழிக்கப்பட்டு விட்டது என்றே தோன்றும். உளவுத்துறை அதிகாரி சாப்பிடுவதை பார்த்தால் “என்ன மணியாச்சு” என்று அவர் முன்னே கூறியதற்கு அர்த்தம் புரியும்.பாவம் கொலபசி போல என்றே தோன்றும். என்ன தான் நாம் வயிறுமுட்ட சாப்பிட்டாலும் மச்சினிச்சி வெட்கப்படாம சாப்பிடுங்கனு சொல்லும்போது மறுபடியும் பசிப்பது போல் இருப்பது ஏன் என்று தான் தெரியவில்லை. மாமியார் உணவுத்துறை அமைச்சர் என்கின்ற காரணத்தினால் மருமகன் எதை விரும்பி சாப்பிடுகிறார் என்று குறித்துக் கொள்வார்கள்.

மருமகன் இருக்கும் மூன்று அல்லது ஐந்து நாள்களும் இது போலவே தொடரும். மருமகன் தன் வீட்டிற்கு திரும்பும் நாளில் பாரதிராஜாவின் ஹீரோயினியைப் போல் ஜன்னல், கதவுக்குப் பின்னால் இருந்து பார்க்கும் மாமியார் முதல் தடவையாக மாமனாருடன் மருமகனுக்கு தரிசனம் தருவார்..

மருமகனுக்கு பத்தாயிரம் ரூபாயும்,துணிகளும்,501 அதரசமும்,501 முறுக்கும்,501 பூரணும் (தேங்காயிட்ட இனிப்பு பதார்த்தம்) கொடுத்து வழி அனுப்பும் மாமனாரையும் மாமியாரையும் பார்க்கும் போது தண்ணியே தெளிக்காம தலையாட்டி எப்படி வேண்டுமானாலும் வெட்டிக்கொள்ளுங்கனு சொல்லுவது போல் தோன்றுவதைத் தவிர்க்க முடியவில்லை...”பாவம் யாரு பெத்த பிள்ளைகளோ”.



-சின்னப்பையன்-  

No comments:

Post a Comment